my home

Powered By Blogger

Friday, 21 October 2011

சாதனைப் பெண்கள்:பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து!

சாதனைப் பெண்கள்:பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து!


மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது.





பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங்களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் பேனா சிந்தும் மையில் அக்கால, இக்கால மக்கள் எழுந்துவந்து நடமாடுகின்றனர், விரல்களின் விளையாட்டில் சிற்பங்கள் பிறக்கின்றன, ஓவியங்கள் உயிர்ப்பெறுகின்றன, கண் பாவங்கள் கதை சொல்கின்றன.
ஆம், எழுத்தாளர், கவிஞர், பரதநாட்டியக் கலைஞர், ஓவியர், சிற்பி, சமூக ஆர்வச் செயல்பாட்டாளர் என்று பன்முகம் காட்டும் சிந்து, இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்.
சென்னையில் பொறியியல் பயின்ற சிந்து, தற்போது ஸ்காட்லாந்தில் படைப்பிலக்கிய எழுத்து முதுகலைப் படிப்பு படித்து வருகிறார்.
கல்லூரி விடுமுறையில் சென்னை வந்திருந்திருந்த சிந்துவை 'சாகுந்தலத்தில்' (அவரது வீடு) சந்தித்துப் பேசினோம்.
கலை, இலக்கிய ஆர்வம் கொண்ட நீங்கள், பொறியியல் படிக்கப் போனது எப்படி?
பிளஸ் டூவில் நான் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு! -வீரேந்தர் சேவாக்கை போல முதல் கேள்வியையே சிக்ஸருக்கு விளாசுகிறார் சிந்து.
தனது தலைப்பிரசவ நாவல் உருவானது குறித்து...?
பொறியியல் படிப்பு முடித்ததும், சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயார் செய்வதற்காக நான் டெல்லி சென்றேன். அப்போது என் மனதில் நீண்டநாட்களாக ஊறிக் கிடந்த விஷயங்கள் 'கலைடாஸ்கோப்பிக் ரிப்ளெக்ஷன்ஸ்' நாவலாக வடிவம் பெற்றன. நான் கண்ட, கேட்ட, படித்த, அனுபவித்த விஷயங்கள்தான் இந்நாவல். இதன் அடிப்படைக் கரு மாறவில்லை என்றபோதிலும், இரண்டு, மூன்று முறை திருப்பித் திருப்பி திருத்தி எழுதினேன்.
'கலைடாஸ்கோப்பிக் ரிப்ளெக்ஷன்ஸ்' நாவல், எந்த மாதிரிக் கலவையான விஷயங்களைப் பிரதிபலிக்கிறது? 

ஐந்து தலைமுறைகளாக நீளும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை இது. அவர்களின் விதி, முரண்பாடுகளின் பூமியான இந்தியாவின் விதியுடன் எவ்வாறு சிக்கலான விதத்தில் பின்னிப் பிணைந்துள்ளது, நமது சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் சாதீயம் எப்படி தனிமனிதர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது போன்றவை பற்றியெல்லாம் இந்நாவல் பேசுகிறது. புதிய கேள்விகளை எழுப்புகிறது. இதில் முதன்மைக் கதாபாத்திரமான 'காதம்பினி'யுடன் கிராமம் தொடங்கி நகரங்களுக்கு நீங்களும் பயணம் செய்யலாம். 1894-ல் தொடங்கும் நாவலின் பயணம், 2003-ம் ஆண்டு வரை நீள்கிறது.
நகரத்தில் வளர்ந்த உங்களால் எந்தளவுக்கு கிராமப்புறச் சூழல், பிரச்சினைகளை எழுத்தில் கொண்டுவர முடியும்?
நான் நகரத்தில் வளர்ந்த, ஆங்கிலம் படித்த பெண்ணாக இருக்கலாம். ஆனால் நானும் தமிழ்ப்பெண்தானே? இந்தச் சமூகத்தின் பெருமைகள், சிக்கல்கள், சவால்களை நானும் அறிவேன். சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில், வேலூர் அருகே உள்ள பள்ளிகொண்டா என்ற எங்கள் பாட்டி ஊருக்குப் போயிருக்கிறேன். கிராமப்புறக் காற்றைச் சுவாசித்திருக்கிறேன். நான் ஒன்றும் அன்னியப் பெண்ணில்லையே?
சரி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள், தமிழ்ச் சமூகம் குறித்து ஆங்கிலத்தில் எழுதியது ஏன்?
என் தமிழ் எழுத்து மீது எனக்கு நம்பிக்கை வராததுதான் காரணம் -பட்டென்று வருகிறது பதில்.
இந்த நாவலுக்கான விமர்சனங்கள், கருத்துகள் எவ்வாறு இருந்தனவாம்?
எதிர்மறையாக அதிகக் கருத்துகள் இல்லை. 'இன்றைய இளைய சமுதாயத்தின் பல கேள்விகளை சிந்து பிரதிபலிக்கிறார்' என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே. சந்துரு பாராட்டியதும், 'மற்ற இளம் இந்திய எழுத்தாளர்களைப் போல சல்மான் ருஷ்டி, நைபாலின் பாணியை சிந்து கைக்கொள்ளவில்லை. நீங்கள் உங்களின் தமிழ் அடையாளத்தை விட்டுவிடாதிருக்கிறீர்கள், என்று கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் குறிப்பிட்டதும் மறக்க முடியாத பாராட்டுகள்" -சிந்துவின் முகத்தில் மெலிதான பெருமித இழை.
சிந்துவின் நாவல், வோடபோன் கிராஸ்வேர்டு புத்தக விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும், இந்த ஆண்டின் ஆறு சிறந்த நூல்களில் ஒன்று என 'வெர்வ்' பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கவை.
நாவல் தவிர...?
சில சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவை, இந்திய, ஸ்காட்லாந்து ஆங்கில இதழ்களில் பிரசுரமாயிருக்கின்றன. எனது, 'தேவதாசி- கோவில் நடனமணி' என்ற சிறுகதை, ஒரு சர்வதேச இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. எடின்பர்க் பிரின்ஜ் பெஸ்டிவல் என்ற இலக்கிய விழாவில், நான் இணைந்து எழுதியுள்ள ஆங்கில நாடகம் அரங்கேறுகிறது. அடுத்த நாவலுக்கான பணியிலும் தற்போது இறங்கியிருக்கிறேன்.
உங்களின் எழுத்து எப்படிப்பட்டது?
உண்மை பேசுவது. மறைப்பாகவோ, மிகையாகவோ இல்லாமல் உண்மையைக் கண்ணாடிப் போல் அப்படியே பிரதிபலிப்பதே சரி என்பது எனது எண்ணம்.

பரதநாட்டியம்?
ஆறு வயது முதல் ஆடிவருகிறேன். பத்மினி துரைராஜ் எனது குரு. பந்தநல்லூர் பாணியில் ஆடுகிறேன். மகாபலிபுரம், சிதம்பரம் நாட்டிய விழாக்கள் உள்ளிட்ட இடங்களில் எனது பாதங்கள் பதிந்திருக்கின்றன.
'உங்களின் கலை உள்ளத்தின் பின்னணி யார்?'
எனது சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் சர்வசுதந்திரம் அளித்திருக்கும் பெற்றோர் (ஞானராஜசேகரன்- சகுந்தலா), நல்ல தோழி, விமர்சகியாக உள்ள தங்கை நந்திதா உள்ளிட்டோர்...
எழுத்தே எனது சமூக செயல்பாட்டுக் கருவி என்று கூறும் சிந்து, சமீபத்தில் எடின்பர்க்கில் சக இந்திய மாணவர்களுடன் இணைந்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகக் குரல் உயர்த்தியிருக்கிறார்.
சிந்துவுக்கு நமது நிறைவுக் கேள்வி இது-
அப்பாவைபோல் படம் இயக்குவீர்களா?
நிச்சயமாய். ஆனால் எனது படங்களில் மசாலா மணம் வீசாது!
நன்று!
சிந்து... இதயம் திறந்து...
உங்களின் பலம்: உண்மை சொல்வது.
பலவீனம்: உணர்ச்சி வசப்படுவது.
கோபப்படுவது: சுதந்திரம் இல்லாததைப் பார்க்கும்போது.
கலை: தீராத தாகம்.
பரதநாட்டியம்: ஓர் உள்ளார்ந்த முழுமையான உணர்வு.
பாதித்த நாவல்: சல்மான் ருஷ்டியின் 'மிட்நைட்ஸ் சில்ரன்'.
தமிழில் பிடித்த எழுத்தாளர்: ஜெயகாந்தன்.
பிடித்த சிறுகதை: நாப்தலீன் (ஈராக்).
பிடித்த தமிழ்த் திரைப்படம்: தில்லானா மோகனாம்பாள்.
அப்பாவின் படங்களில் பிடித்தது: மோகமுள்.
  • ஏக்கம்: தமிழ் எழுத்தாளர்கள் போல் எழுத முடியவில்லையே

No comments:

Post a Comment

About Me

My photo
srilanka, Sri Lanka
i'm jinothini from jaffna...